சுண்டைக்காய்
இந்த சுண்டைக்காயை சுண்டக்காய் என்றும் சொல்வதுண்டு. இந்தக் காய் கசப்புச் சுவையுடையது. பெரும்பாலும் மலைப் பிரதேசங்களில் விளையக் கூடிய காய்கறிகளில் இந்தச் சுண்டைக் காய் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
இந்தச் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுவது நல்லது என்பது சித்தர்களின் அபிப்ராயம்.
”நெஞ்சின் கபம்போ நிறைகிருமி நோயும்போம்
விஞ்சு வாதத்தின் விளைவும்போம் -வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கு மாமலையிலுள்ள சுண்டைக்
காயை சுவைப்பவர்க்குக் காண்”
என்றால் –
- இந்தக் சுண்டைக்காயானது கபத்தை நீக்கி விடுகிறது.
- வயிற்றில் ஏற்படும் கிருமிகளைக் கொன்று மீண்டும் கிருமிகளின் ஆதிக்கம் தலை யெடுக்க விடாமல் செய்கிறது.
- மிஞ்சி நிற்கக் கூடிய வாத நோய்களானது விலகி ஓடிப்போகும்.
இப்படிச் சுண்டைக்காயின் நற்பலன்கள் மட்டுமே கவியில் சொல்லப்படுவதால் சுண்டைக் காயினால் பிறிதொரு தீமை எதுவும் இல்லை என்று கூறலாம்.
சுண்டைக்காய் வற்றலின் பலன்கள்
பச்சையாக இருக்கும் சுண்டைக்காயானது எல்லா சீசன்களிலும் கிடைப்பது இல்லை. அதன் காரணமாக சுண்டைக்காயை விரும்பி உண்ண நினைத்தாலும் முடியாது என்ற நிலைமையில் உள்ளவர்களுக்காகவே-
எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடிய சுண்டைக்காய் வற்றலானது இப்போது கடைகளிலேயே ரெடிமேடாகக் கிடைக்கும்படி செய்துள்ளார்கள்.
சுண்டைக்காய் சீசனில் நிறைய சுண்டைக் காயை வாங்கி வற்றலாகப் போட்டு வைத்துக் கொண்டால் சுண்டைக்காய் இல்லாக் குறையினை நிவர்த்திக்கலாம்.
இந்த வற்றலைப் பற்றி நம் மகாபுருஷர்கள்
கூறி உள்ளனரா? ஆம்! நிச்சயமாகக் கூறியுள்ளார்கள்!
எப்படித் தெரியுமா?
பித்த வரோசகம்போம் பேராய் பழுச்சாகு
முற்ற கிராணியறு முட்பசியாஞ் சத்தியமாய்ப்
பண்டைக் குதவாமம் பற்றுமறு மாரையுந்தாள்
சுண்டைக்காய் வற்றலிண்னச் சொல்”
- இந்தச் சுண்டைக்காய்வற்றல் உண்பதால் பித்தத்தினால் ஏற்படும் வாந்தியானது மட்டுப்படும்.
- வயிற்றில் வாழக்கூடிய கீரிப்பூச்சி, நாக்குப் பூச்சி, கொக்கிப்புழு, நாபிப்புழு போன்ற எவ்விதப் புழுக்களாக இருந்தாலும் கூண்டோடு மாண்டு மடிந்து ஒழியும்.
- தொத்து வியாதிகளினாலோ, வேறு எவ்விதக் காரணத்தினாலோ வரும் பேதியானது முற்றிலும் நின்று போகும்.
- மலத்துடன் இரத்தமும், சளியும் கலந்து வரும் சீதபேதி என்ற நோய் ஒழியும்.
- ஆசனத் துவாரத்தில் ஏற்படும் வலிகளைக் கண்டிக்கும்.
- குடலைச் சுத்தப்படும்.
- அபரிமிதமான பசியைத் தூண்டி விடும்.
இவ்விதக் காரணங்களினால் சுண்டைக்காய் வற்றலானது ,உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருந்துமாகும்.
நாம் அடிக்கடி உணவில் கட்டாயம் இந்த சுண்டைகாயை சேர்த்துக்கொள்ள வேண்டும்.