Homeஆன்மீகம்அம்மனை போற்றும் ஆடி மாதத்தின் சிறப்புகள் என்ன ?

அம்மனை போற்றும் ஆடி மாதத்தின் சிறப்புகள் என்ன ?

THATSTAMIL-GOOGLE-NEWS

ஆடி மாதம்

உலகின் உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கு ஆதார சக்தியாக விளங்கும் ஆதவன். அவரது பகை வீடான மிதுன ராசியை விட்டு மற்றொரு பகை ராசியானதும் சந்திரனின் ஆட்சி வீடாக திகழ்வதுமான கடக ராசிக்கு பிரவேசித்து வலம் வரும் காலத்தையே “ஆடி” மாதம் என பூஜித்து வருகிறோம்.

மற்ற எந்த மாதத்திற்கும் இல்லாத ஓர் தனி தெய்வீக பெருமை பெற்றது இந்த ஆடி மாதம். அதன் தனி பெருமை தான் என்ன?

அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஈன்றெடுத்த அன்பு அன்னையாக, பாசம் எனும் பாலூட்டி வளர்த்து பராமரித்து அருளும் அன்னை பராசக்தி திருக்கயிலை பிராணனான சிவபெருமானை பதியாக அடைவதற்காக மிக கடினமான உபவாசம் இருந்து “ஆடிதபசு” என பக்தர்கள் இன்றும் போற்றிக் கொண்டாடி பூஜித்து வரும் விரதத்தை அனுஷ்டித்த பரம புண்ணிய மாதம் இது.

கடைபிடிப்பதற்கு மிகவும் கடினமான இந்த உபவாச விரதத்தை அம்பிகை அனுஷ்டிக்கும் போதுதான் அவளது குழந்தைகளான ஏராளமான பக்தர்கள் கூடை கூடையாக பலவித வாசனை புஷ்பங்களை கொணர்ந்து அம்பிகையை புஷ்ப குவியல்களால் மஞ்சனமாட்டி மகிழ்கின்றனர். ‘பூச்செறிதல்’ என்னும் அதி அற்புத விழாவின் அழகையும் பக்தியையும் காண ஆயிரம் கண்கள் போதாது.

ஆடி

ஒவ்வொரு திருத்தலத்திலும், சிற்றூர்கள், சிறு கிராமங்களில் கூட அம்மன் சன்னதியில் ஆடி மாதத்தில் அம்மனுக்காக கரகம் எடுத்து விசேஷமாக விழா எடுத்துக் கொண்டாடுவது அனைவரும் அறிந்ததே! தமிழகத்தின் புண்ணிய திருத்தலமான சங்கரன்கோயிலில், கோமதி அம்மன் “ஆடி தபசு” காட்சியை காண பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அன்று அன்னையின் திருக்கண்களில் இருந்து வெள்ளமென பெருகிவரும் அருட்கருணையை காணும் போது மெய்சிலிர்க்கும். நம்மையும் அறியாமல் உடலிலும் உள்ளத்திலும் ஆனந்தம் பெருகி கண்களில் ஆனந்த பெருநீர் சுரக்கும் அனுபவத்தில் இதை உணர முடியும்.

இந்த ஆண்டு ஆடி 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த அரிய தரிசன விழா கொண்டாடப்படுகிறது. வசதியுள்ள அன்பர்கள் தவறாமல் சென்று தரிசிப்பது பல பிறவிகளிலும் கிடைத்ததற்கரிய புண்ணிய புனித தரிசனமாகும்.

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் சூரியன் வலம் வரும் கடக ராசி மனோகாரகரும் மாத்ரு காரகருமான சந்திரனின் ராசியாகும். சூரியன் சரீர காரகராவார். உடலுக்கு உரியவர் சூரியன். மனதுக்கு உரியவர் சந்திரன். மனிதப் பிறவியின் அனைத்து ஆற்றல்களும் செயல்களும் உடல், மனம் ஆகிய இரண்டின் உள்ளே அடங்கியவை ஆகும். உடலை கட்டுப்படுத்தும் சூரியன் மனதை கட்டுப்படுத்தும் சந்திரன் ராசியில் சஞ்சரிக்கும் போது மனதின் ஆற்றல்களிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தும் என பாஸ்கர ஸம்ஹிதை எனும் புராதன நூலிலும், அஷ்டாங்க ஹ்ருதயம் எனும் புராதன நூலிலும் சரகர் ஸம்ஹிதை ஆகிய பிரசித்தி பெற்ற ஆயுர்வேத நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.நவகிரகங்களின் சஞ்சார நிலைகளுக்கும் நமது உடல் நலனுக்கும் உள்ள சம்பந்தம் இதனால் விளங்குகிறது அல்லவா?

ஆடி

ஆடி மாதத்திற்கு மற்றொரு பெருமையும் உண்டு. “மகிஷாசுரன்” என்னும் கொடிய அரக்கன் கடும் தவம் இயற்றி ஆண்கள், விலங்குகள், பறவைகள், தண்ணீர், நெருப்பு ஆகியவற்றால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரனை பெற்றான். பெண்களுக்கு தன்னை கொல்லும் வலிமை கிடையாது என்பது அவனது எண்ணம். அதனால் பெண்களாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது என அவன் ஈஸ்வரனிடம் வரம் கேட்கவில்லை. தேவர்களும் முனிவர்களும் கொடியவனை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய அருள் புரியும்படி சிவபெருமானை சரணடைந்து வேண்டினர். அதன் விளைவாக அம்பிகை பராசக்தி ஈசனை வணங்கி அவரது அனுமதியும் பெற்று ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை தினத்தில் அன்னை சாமுண்டி தேவியாக தனது ஒவ்வொரு ஹஸ்தங்களிலும் (கைகளில்) கத்தி, கதை, வாள், சக்கரம், திரிசூலம் போன்ற திவ்ய ஆயுதங்களை தரித்த 18 திருகரங்களுடன் காட்சியளித்தாள். மார்க்கண்டேய மகரிஷியால் பூஜிக்கப்பட்ட பெருமைகளை கொண்ட அன்னை சாமுண்டீஸ்வரியாக ஈரேழு பதினான்கு உலகினராலும் வணங்கப்பட்டாள்.

மகத்தான சக்தி வாய்ந்த அன்னை சாமுண்டீஸ்வரி கடும் போரிட்டு மகிஷாசுரனை வதம் செய்து மக்களை காத்தருள் புரிந்தாள். அன்றிலிருந்து “மகிஷாசரமர்த்தினி” எனும் திருநாமத்துடன் பூஜிக்கப்படுகிறாள்.

மக்களின் பக்தியை பரம காருண்யத்துடன் பெற்றுக்கொண்டு தற்போதைய கர்நாடகாவில் மைசூரில் சாமுண்டி மலையில் எழுந்தருளிபக்த கோடிகளுக்கு இன்றளவும் அருள்பாலித்தருள் புரிகின்றாள். அகிலத்தை ஆளும் அன்னை சாமுண்டீஸ்வரி!

tamil jathagam

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments