வெந்தயம்
உணவில் அன்றாட நாம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று “வெந்தயம்” உணவுக்கு ருசியை கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவ குணங்கள் நம்மை நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும் வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 மில்லி அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் உரிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தய தண்ணீரை குடியுங்கள்.
கணிப்பொறியில் தொடர்ந்து பணி செய்பவர்களுக்கு உடல் சூடால் ஏற்படும் பல்வேறு உபாதைகளை போக்கும் வல்லமை வெந்தயத்திற்கு உண்டு. வாரம் ஒரு முறை வெந்தய தண்ணீர் குடித்து வர உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை எடுத்துக்கொண்டு வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தய பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவைப்படும்போது தண்ணீரிலோ/ மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன் சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெண்ணீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகிவர வயிற்றுக் கோளாறுகள் அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/ மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடி செய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில் வெந்தயதுடன் பெருங்காய பொடியை சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என மூன்று முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டு வலிக்கு வெந்தய தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால் வெந்தைய பொடியை சிறிய வெல்லக் கட்டியுடன் கலந்து சிறு சிறு உருண்டையாக்கி தினமும் மூன்று முறை சாப்பிட்டு வர மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும் வெந்தய பொடியையும், பெருங்காய பொடியையும் சேர்க்க சுவை கூடுவதுடன் உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசி, உளுத்தம் பருப்புடன் வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால் சுவை கூடுவதுடன் உடலுக்கு ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால் நீரழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒரு முறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி கொடுக்க பால் சுரக்கும்.