HomeTAMIL NADUபாரதியார் பற்றிய முழு தகவல்கள் | Bharathiyar History in Tamil

பாரதியார் பற்றிய முழு தகவல்கள் | Bharathiyar History in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

பாரதியார் பற்றிய முழு தகவல்கள் | Bharathiyar History in Tamil

பாரதியார் வாழ்க்கை வரலாறு

பாரதியார் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் ஆவார்.

Table of Contents

Biography of Mahakavi Bharathiyar in Tamil

பாரதியாரின் இயற்பெயர் – சுப்பையா என்கிற சுப்பிரமணியம்

பாரதியார் பிறந்த ஊர் – எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்

பாரதியார் பிறந்த ஆண்டு – 11.12.1882

பாரதியாரின் பெற்றோர் – சின்னசாமி ஐயர்,இலக்குமி அம்மாள்

பாரதியாரின் மனைவி – செல்லம்மாள்

பாரதியாரின் பிள்ளைகள் – தங்கம்மாள், சகுந்தலா

சமயம் – இந்து சமயம்

பாரதியார் எழுதிய நூல்கள் – பாப்பா பாட்டு,பாஞ்சாலி சபதம்,குயில் பாட்டு,கண்ணன் பாட்டு மற்றும் பல.

பாரதியார் இறந்த ஆண்டு – 11.09.1921

பாரதியார் வாழ்ந்த காலம் – 11.12.1882 முதல் 11.09.1921 வரை (39 ஆண்டுகள்)

பாரதியார் நினைவு இல்லம் – எட்டயபுரம், தூத்துக்குடி : திருவல்லிக்கேணி – சென்னை

பாரதியார் மணி மண்டபம்: எட்டயபுரம், தூத்துக்குடி

பாரதியார் பிறப்பு

மகாகவி சுப்ரமணிய பாரதியார் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் 1882 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் மகனாக பிறந்தார். அவருக்கு தம் பெற்றோர்கள் இட்ட பெயர் சுப்பையா.

மகாகவி பாரதியார்

பாரதியாரின் இளமைப் பருவம்

ஐந்து வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார், ஏழு வயது முதலே கவிதையால் ஈர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியாருக்கு பதினோரு வயது இருக்கும்போது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து இவர் பெயர் சுப்ரமணிய பாரதியார் என்றாயிற்று.

திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ் அறிஞர்கள் மற்றும் பண்டிதர்களுடன் சொற்போரில் சுதந்திரமாக ஈடுபட்டார். இதன் காரணமாக அவரின் தமிழ் புலமை மேலும் அதிகரித்தது.

பாரதியாரின் திருமண வாழ்க்கை

1897 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி பாரதியாரின் வாழ்நாளில் மறக்க முடியாத தேதியாக மாறியது.14 வயது மட்டுமே நிறைவடைந்த பாரதியாருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாள் உடன் நடந்தேறியது சிறார் திருமணம்.

பாரதியார் கற்ற மொழிகள்

பாரதியார் தன் தந்தையாரிடம் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றைக் கற்றார்.

16 வயதில் தன் தந்தையையும் இழந்த பாரதியார் அதன்பிறகு சில காலம் வறுமையில் வாடி தவித்தார். பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றறிந்தார்.இது மட்டுமல்லாமல் அவர் வடமொழி, இந்தி, பிரெஞ்சு ஆகிய பல மொழிகளையும் கற்றார்.

பாரதியார் பதினான்கு மொழிகள் கற்றறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால்தான்,“ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தெளிவாக எடுத்துரைத்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

பாரதியார் செய்த பணிகள்:

4 ஆண்டுகளுக்கு பிறகு காசியிலிருந்து தமிழகம் திரும்பினார் பாரதியார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார் பாரதியார்.

பாரதியாரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் – மதுரையிலிருந்த விவேகபானு என்னும் நாளேட்டில் வெளிவந்தது. (1904, தலைப்பு – தனிமை இரக்கம்)

அதன் பிறகு பாரதியார் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பிறகு சுதேச மித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு

பாரதியார் 1905-இல் சக்கரவர்த்தினி என்ற இதழை தொடங்கி அதில் ‘வந்தேமாதரம்’ என்ற பாடலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

சுப்பிரமணிய பாரதியாருக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளை உடன் நட்பு ஏற்பட்டது.அதன் பிறகு பாரதியார் 1906-இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார் அவரை தம் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்.

தன்னுடைய பல பத்திரிக்கையின் மூலம் இந்திய சுதந்திர முழக்கத்தை தனது எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தினார்.

பாரதியின் தேசிய முழக்கங்கள்:

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்யாரும் சேருவீர்”

பாரதியார் விடுதலை வேட்கையைத் தூண்டும் வகையில் “விடுதலை! விடுதலை! விடுதலை!” என்றும், “என்று தனியும் இந்த சுதந்திர தாகம்” என்றும் பாடல்களை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1921-இல் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று பாரதியார் முழக்கமிட்டார்.

“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு” என்று பெருமிதத்தோடு பாடியவர் – பாரதியார்

பாரதியாரின் சுதந்திர கட்டுரை

பாரதியார் தன்னுடைய சுதந்திர எழுச்சியை பாடல்களின் வழியாகவும், கேலிச் சித்திரங்களின் வழியாகவும் வெளிப்படுத்தினார். இது சுதந்திரப் போராட்டத்திற்கு கைகொடுத்து வழிநடத்தியது. இதனால் ‘இந்தியா’ என்ற வார பத்திரிக்கை மீது பிரிட்டிஷ் அரசின் பார்வை விழுந்தது. இதன் காரணமாக பாரதியார் பாண்டிச்சேரியில் தலைமறைவாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது. பாரதியார் புதுவையில் இருந்து 1908 ஆம் ஆண்டு முதல் ‘இந்தியா’ என்ற வார பத்திரிக்கையை வெளியிடத் துவங்கினார். இதை கவனித்த பிரிட்டிஷ் அரசு அந்த பத்திரிக்கையை படிக்க தடை விதித்தது.

புதுவையில் பாரதியாரின் கவிதைகள்

பாரதியார் நடத்திய பத்திரிக்கைக்கு தடைவிதித்த பிரிட்டிஷ் அரசால் பாரதியாரின் புலமையை தடுக்க முடியவில்லை. பாரதியார் புதுவையில் இருந்து கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு போன்ற முப்பெரும் காவியங்களை இயற்றினார்.

பாரதியார் 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் கவிதைகள்

பாரதியார் கைது

1918ஆம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து வெளியேறி பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடன் பாரதியார் கைது செய்யப்பட்டார்.34 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பிறகு பாரதியார் விடுதலை செய்யப்பட்டார். பாரதியார் விடுதலையானதும் தன் மனைவியின் ஊரான கடையம் என்னும் ஊரில் குடியேறினார். இரண்டு ஆண்டுகள் அங்கேயே இருந்தார்.

Bharathiyar house in puducherry

வறுமையில் பாரதியார்

கடையத்தில் இருந்த பாரதியாருக்கு வறுமை மீண்டும் சூழ்ந்துகொண்டது. தன் நிலையை விளக்கி சீட்டு கவிதை ஒன்றை எட்டயபுர மன்னருக்கு பாரதியார் அனுப்பினார். ஆனால் மன்னரிடம் இருந்து எந்த ஒரு எதிர்பார்த்த உதவியும் பாரதியாருக்கு கிடைக்கவில்லை. இந்த வறுமையான காலக் கட்டத்திலும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் பசியில்லாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் பாரதியார்.வீட்டில் தன் மனைவி சமைக்க வைத்திருக்கும் சிறிதளவு அரிசியைக் கூட காக்கைக்கும், குருவிக்கும் வாரி இறைத்து விட்டு பாரதியார் பசியோடு வாழ்ந்த நாட்கள் ஏராளம். இத்தகைய உணர்வுள்ள ஒரு மாமனிதரால் தான், “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கவி பாட முடியும்.

Bharathiyar family

இத்தகைய வறுமையிலும் கூட தன்மானத்தோடு வாழ்ந்தார் புரட்சித் தமிழன் பாரதியார். பொதுவாக கொடுக்கிற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும் என்று உள்ள இலக்கணத்தை மாற்றினார் நமது தேசிய கவி பாரதியார். ஒருமுறை தன்னுடைய பணக்கார நண்பர் ஒருவர், தட்டில் பணத்தையும் பட்டாடையும் வைத்து பாரதியாரிடம் கொடுத்தாராம். ஆனால் பாரதியோ, தட்டை உன்னிடமே வைத்துக் கொள் நண்பரே என்று கூறி, தமது கைகளால் அந்த தட்டில் இருந்ததை மட்டும் எடுத்துக் கொண்டாராம். தன்னுடைய கை எதற்காகவும் தாழ்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

காந்தி மற்றும் பாரதியார் சந்திப்பு

வறுமையில் சிலகாலம் வாழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1919 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது அவர் ராஜாஜியின் வீட்டிற்கு ஒருமுறை சென்றபோது அங்கிருந்த மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி,காந்தி,மகாகவி பாரதியார் சந்தித்த நிகழ்வு அதுவே முதலும் கடைசியும் ஆகும்.

பாரதியார் இறப்பு

பாரதியார் 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார். அங்கு யாரும் எதிர்பாராத விதமாக அந்த கோவில் யானை பாரதியாரை தூக்கி எறிந்தது. அதனால் அவருக்கு தலையிலும் கையிலும் காயங்கள் ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட போதும் வயிற்று கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். மருந்துகளை சாப்பிட மறுத்த பாரதியார் தனது 39-வது வயதில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

பாரதியார் பற்றிய குறிப்புகள்:

  • பாரதியார் தன் தந்தையாரிடம் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றைக் கற்றார். இது மட்டுமல்லாமல் அவர் வடமொழி, இந்தி, பிரெஞ்சு ஆகிய பல மொழிகளையும் கற்றார்.
  • பாரதியார் பதினான்கு மொழிகள் கற்றறிந்தவர்.
  • பாரதியாரின் ஞானகுரு – நிவேதிதா தேவி
  • பாரதியாரின் அரசியல் குரு – திலகர்
  • இளம் வயதில் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்ததால் தன் பதினோராவது வயதில் ‘பாரதி’ என்னும் பட்டத்தை பாரதியார் பெற்றார்.
  • பாரதியாருக்கு ‘பாரதி’ என்ற பட்டம் வழங்கியவர்கள் – எட்டையபுர சமஸ்தானப் புலவர்கள்
  • பாரதி என்றால் ‘கலைமகள்’ என்று பொருள் ஆகும்.
  • பாரதி,சரஸ்வதி இரண்டுமே கலைமகளின் வேறு பெயர்களாகும்.
  • ஞானத்தில் உயர்ந்த துறவிகளுக்கு கொடுக்கப்படும் பட்டம் – சரஸ்வதி
  • அறிவில் சிறந்த இல்லறத்தார்க்கு கொடுக்கப்படும் பட்டம் – பாரதி
  • பாரதியார் 1897-ல் செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்தார்.
  • பாரதியாரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் – மதுரையிலிருந்த விவேகபானு என்னும் நாளேட்டில் வெளிவந்தது. (1904, தலைப்பு – தனிமை இரக்கம்)
  • பாரதியார் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ‘சுதேச மித்திரன்’ என்ற நாளிதழில் துணையாசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பாரதியார் 1905-இல் சக்கரவர்த்தினி என்ற இதழை தொடங்கினார்.
  • பக்கிம் சந்திரரின் “வந்தே மாதரம்” பாடலை தமிழில் மொழிபெயர்த்து சக்கரவர்த்தினி இதழில் வெளியிட்டவர் – மகாகவி பாரதியார்
  • பாரதியார் 1906-இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • பாரதியார் 1907-இல் ‘இந்தியா’ என்ற வார இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
  • 1908-இல் ஆங்கிலத்தில் ‘பாலபாரதம்’ என்னும் இதழைத் தொடங்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதன் ஆசிரியராகவும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பாரதியார் 1908-இல் தாம் பாடிய பாடல்களை ‘ஸ்வதேச கீதங்கள்’ என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
  • அச்சில் ஏறிய பாரதியின் முதல் நூல் – ஸ்வதேச கீதங்கள் (1908)
  • பாரதியார் கர்மயோகி, விஜயா சூரியோதயம் ஆகிய இதழ்களிலும் ஆசிரியராக பணியாற்றினார்.

தமிழின் சிறப்பை வெளிப்படுத்தும் பாரதியின் பாடல்:

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்”

பாரதியாரின் “ஞானரதம்” என்பதே தமிழில் தோன்றிய முதல் உரைநடை காவியமாகும்.

பாரதியின் முப்பெரும் பாட்டு அல்லது முப்பெரும் காவியங்கள் எனப்படுபவை,

  • குயில் பாட்டு
  • கண்ணன் பாட்டு
  • பாஞ்சாலி சபதம்

பாரதியாரின் பாஞ்சாலி சபதம் ‘கண்ட காவியம்’ எனப்படுகிறது.

பெண்ணடிமைக்கு எதிராக “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்…” என்று பாரதியார் பல பாடல்களைப் பாடினார்.

  • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர் – பாரதியார்
  • ஆங்கிலக் கவிஞரான ‘ஷெல்லி’ மீது ஈடுபாடு கொண்டதால் பாரதியார் தன்னை ‘செல்லிதாசன்’ என அழைத்துக் கொண்டார்.
  • தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்தக் கவிஞர் – பாரதியார்
  • உரைநடை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் என்பது என்னுடைய கட்சி என்கிறார் பாரதியார்.
  • பாரதியார் சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • எளிய மக்களை நோக்கி கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும்.
  • பாரதியார் கீதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • தமிழில் முதன் முதலில் கருத்துப்படங்கள் வெளியிட்டவர் – பாரதியார்
  • கேலிச் சித்திரம் எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியாரைச் சாரும்.
  • அமெரிக்கக் கவிஞரான “வால்ட் விட்மன்” முறையைப் பின்பற்றி பாரதி வசன கவிதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இவரது புதுக்கவிதையின் முன்னோடி – வால்ட் விட்மன்
  • பாரதியார் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பலவகையான பாடல்களை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 20ஆம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தது பாரதியின் கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பற்றிய புகழுரை:

  • பாரதியார் பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர் – கிருஷ்ணசாமி ஐயர்.
  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் படத்தை வரைந்தவர் ஆர்யா என்கிற பாஷ்யம்.
  • பரலி சு.நெல்லையப்பர் – பாரதியார் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் ஆவார்.
  • பாரதியார் பாடல்களை நாட்டுடமை ஆக்கியவர் – ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
  • பாரதியை நினைத்துவிட்டால் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும். இந்தியன் நான் என்றிடும் நல் இருமாப்பு உண்டாகும் என்று கூறியவர் நாமக்கல் கவிஞர்.
  • ‘பாரதி’ என்கிற சங்கத்தை தொடங்கியவர் – கல்கி
  • சுப்பிரமணிய பாரதி தன் பூணூலை கனகலிங்கம் (புதுச்சேரி) என்பவருக்கு அணிவித்தார்.
  • பாரதியாருக்கு ‘மகாகவி’ என்ற பட்டத்தை வழங்கியவர் – வ.ரா.ராமசாமி ஐயங்கார்
  • ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்று கவிமணி பாரதியாரை போற்றுகிறார்.
  • புதுக்கவிதையின் தந்தை எனப் பாரதியாரை பாராட்டியவர் – ந.பிச்சமூர்த்தி

பாரதியாரின் சிறப்பு:

  • கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் – பாரதியார்
  • பாரதியின் சுயசரிதமே தமிழின் முதல் சுயசரிதம் ஆகும்.
  • பாரதியார் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி,வங்காளம்,அரபு, பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
  • வால்ட்விட்மன் எழுதிய புதுக்கவிதை நூல் – புல்லின் இதழ்கள்
  • வால்ட்விட்மன் சாயலில் வசனக் கவிதை எழுதியவர் – பாரதியார்
பாரதியாரைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் சிறப்பாக கூறுவது,
  • தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை
  • கவிமுரசு
  • பாரதியார் உலககவி
  • கதையின் புதையல்
  • சிந்துக்குத் தந்தை
  • செந்தமிழ்த் தேனீ
  • கவிதைக் குயில்
  • அறம் பாடிய அறிஞன்
  • மறம் பாடிய மறவன்
  • கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
  • என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
  • நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
  • தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
  • காடு கமல வந்த கற்பூரச் சொற்கோ

மேற்கோள்கள்: பாரதியார் பாடல்கள்

முப்பதுகோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே
தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம்; கண்ணீரால் காத்தோம்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கு காணோம்
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை! உண்மை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை!
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்.
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்.
சாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம். நீதி நெறியினின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர்,கீழவர் மற்றோர்.
தனியொருவனுக் குணவிலை யெனில் சகத்தினை அழித்திடுவோம்
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்
ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்
மாதர் தம்மை இழிவுசெய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்
செய்வோம் ஆலைகள் வைப்போம்
கல்விச்சாலைகள் வைப்போம்.
புவியனைத்தும் போற்றத் தமிழ் மொழியைப் புகழில் ஏற்ற, கவியரசன் இல்லை என்ற குறை என்னால் தீர்ந்தது; நமக்குத் தொழில் கவிதை ! நாட்டிற்
குழைத்தல்! இமைப்பொழுதும் சோரா திருத்தல் என்று அறிவித்தார்.
சுவை புதிது! பொருள் புதிது! வளம் புதிது! சொல் புதிது! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை என்
கவிதை என சூளுரைத்தார்.
வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம் மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்

பாரதியார் புனைப் பெயர்கள்:

  • ஷெல்லிதாசன்
  • காளிதாசன்
  • சக்திதாசன்
  • ஓர் உத்தம தேசாபிமானி
  • சித்தனாய் வந்த நித்திய சூரியன்
  • நித்தியதீரர்
பாரதியார் சிறப்புப் பெயர்கள்:
  • உலககவி
  • மகாகவி
  • அமரக்கவி
  • தேசியக்கவி
  • சீட்டுக்கவி
  • மக்கள் கவி
  • முண்டாசுக் கவிஞர்
  • ஷெல்லிதாசன்
  • ஞானரதம்
  • விடுதலைக்கவி
  • முன்னறி புலவன்
  • தமிழ் புதுக்கவிதையின் தந்தை
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி
  • தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி
  • புதுக்கவிதையின் முன்னோடி

பாரதியார் இயற்றிய நூல்கள்

பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள்:
  • தராசு
  • சந்திரிகையின் கதை
  • ஞானரதம் – தமிழில் தோன்றிய முதல் உரைநடை காவியம்
பாரதியார் எழுதிய நாடகம்:
  • ஜெகச்சித்திரம்
பாரதியார் எழுதிய சிறுகதைகள்
  • கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு)
  • சின்ன சங்கரன் கதை
  • நவதந்திரக் கதைகள்
  • திண்டிம சாஸ்திரி
  • பூலோக ரம்பை
  • ஸ்வர்ண குமாரி
  • ஆறில் ஒரு பங்கு
பாரதியார் எழுதிய கவிதை நூல்கள்:
  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு – கலிவெண்பா அமைப்பில் பாடப்பட்டுள்ளது.
  • பாப்பா பாட்டு
  • பாஞ்சாலி சபதம்
  • புதிய ஆத்திச்சூடி
  • காட்சி (வசன கவிதை)
  • விநாயகர் நான்மணிமாலை
  • முரசு
  • முருகன் பாட்டு
  • அக்னி குஞ்சு
  • சீட்டுக்கவி
  • புதிய ஆத்திச்சூடி
  • செந்தமிழ் நாடு
  • இவர் பாரத நாடு
  • சுதேச கீதங்கள்
பாரதியார் நடத்திய இதழ்கள்:
  • விஜயா
  • கர்மயோகி
  • இந்தியா (வார இதழ்) (ஆசிரியர்)
  • சுதேச மித்திரன் (துணையாசிரியர்)
  • பாலபாரதம் (ஆங்கில மாத இதழ்)
  • சக்கரவர்த்தினி (மகளிர் மாத இதழ்)

Mahakavi Bharathiyar English Overview

mahakavi bharathiyar

  • Mahakavi Bharathiyar was born on 11th December 1882
  • Bharathiyar original name was Subbaiya.
  • Mahakavi Bharathiyar is a great poet. He lived in Tamilnadu, India. Subramaniya Bharathiyar was interested in writing poem from his early age.
  • Mahakavi Bharathiyar is a freedom fighter. He wrote many poems for Indian freedom.
  • The king of Ettayapuram given him name Bharathi. After that, Subbaiya was called as ‘Subramaniya Bharati’.
  • Mahakavi Subramaniya Bharathiyar worked as a poet in Ettayapuram kingdom.
  • Mahakavi Bharathiyar knows many languages like Tamil, English, Hindi, Sanskrit,Bengali and few other.
  • Bharathiyar died on September 11, 1921.
  • In Our Tamil History is called as Varalaru.So we can say that here we have Mahakavi Subramaniya Bharathiyar Varalaru in Tamil.

 

Read also,

tnpsc shouters current affairs

tntextbook

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments